Followers

Thursday, December 12, 2019

சித்தர்கள் பகுதி 6


வணக்கம்!
          பல பிரச்சினைகள் எனக்கும் திடீர் என்று இந்த மாதத்தில் ஏற்பட்டது. அதனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சித்தர்கள் பகுதி எழுதியவுடன் அது குறைந்துவிட்டது. ஒரு சில கோவில்களையும் நாம் தரிசனம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. மனதிற்க்குள் நிம்மதி இன்மை வந்தாலும் மனதை சரி செய்யும் தெய்வீக ஆற்றலை இறைசக்தி கொடுத்தது.ஒரு சில நாட்களிலேயே அதுவாகவே சென்றுவிட்டது.

ஒரு நண்பரோடு பேசும்பொழுது கூட சொல்லி்கொண்டு இருந்தேன். பெரும்பாலான பாடல் பெற்ற ஸ்தலங்கள் நான் வசிக்கும் பகுதியில் இருக்கின்றன ஆனால் இத்தனை நாளும் இதனை தரிசனம் செய்யவேண்டும் என்ற ஒரு ஆவல் எனக்கு வந்ததில்லை. சித்தர்கள் பகுதியை எழுதிய நாளில் இருந்து எனது மனதிற்க்குள்ளும் இந்த நல்ல எண்ணத்தை கொடுத்தது. இந்த கோவில்களை எல்லாம் சென்று தரிசனம் செய்துவிடவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியது.

இதில் என்ன பெரிய விசயம் இருக்கின்றது என்று கேட்கலாம். உண்மையில் இது பெரிய விசயமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். நமது பகுதியில் இருக்கும் மக்களில் ஐந்து சதவீத மக்கள் கூட இந்த தலத்தை பார்த்தில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்க்காத பலர் இங்கு இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இறைசக்தி அதனை தரிசனம் செய்யவேண்டிய பக்தியை நமக்கு கொடுக்கவேண்டும். சித்தர்கள் இருந்தாலும் அதனை நாம் தேடிச்செல்லும் மனநிலையை உருவாக்க வேண்டும். நாமும் அதற்க்கு சிறிய முயற்சி செய்தால் போதும் மற்றது அதுவாகவே நடந்துவிடும். சித்தர்கள் உங்களை ஆட்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.

நாம் பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து இருக்கிறோம். உண்மையில் பாக்கியம் என்பது ஒன்பதாவது வீடு நமக்கு இப்படிப்பட்ட பாக்கியத்தை கொடுப்பது தான் பாக்கியம் மற்றது அனைத்தும் பாக்கியமாகவே இருக்காது. உங்களின் ஆத்மாவிற்க்குள் பதியும் நல்ல பாக்கியம் இப்பிறவி மற்றும் வரும் அனைத்து பிறவியிலும் எடுத்துச்செல்லும் ஆத்மாவிற்க்கு நல்ல தரிசனத்தை கொடுப்பது தான் பாக்கியஸ்தானம்.

இந்த பிறவியில் சம்பாதிப்பது எதுவாகாயிலும் அது இங்கேயே சென்றுவிடும். நீங்கள் சேர்க்கும் ஆன்மீக விசயம் தான் உங்களோடு வரும் ஒரு பெரிய பாக்கியம். உங்களின் ஆத்மாவின் கணக்கில் பதியும் நல்ல பாக்கியமாகவே இருக்கும். 

சித்தர்களின் அருளை நாடிச்செல்லும் உங்களின் ஆத்மா உண்மையில் பாக்கியம் பெற்றதாகவே இருக்கும். இந்த உலகத்தில் ஏதோ பல விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் விட்டுவிட்டு என்றும் அழியாத ஒரு செல்வத்தை தேடி உங்களின் மனது நாடுகின்றது என்றால் கண்டிப்பாக நல்ல பாக்கியம் இருக்கின்றது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். 

நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் முயற்சியில் தோல்வி இல்லாமல் சென்றுக்கொண்டே இருக்கவேண்டும். ஜாதககதம்பத்தை எழுதிய நாளில் இருந்து இன்று வரை என்னோடு பயணம் மேற்க்கொண்டு வருபவர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு சிலர் விலகியும் சென்று இருக்கின்றனர். அவர்கள் ஏதோ ஒன்று தடுத்து விலகி சென்று இருக்கலாம் அல்லது நம்மை விட உயர்ந்தற்க்கு சென்று இருக்கலாம். போனவர்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. என்னோடு பயணம் செய்யும் நபர்கள் அனைவரும் நிறைய ஆன்மீக இடங்களுக்கு செல்லுங்கள் உங்களுக்கு நல்ல அருள் கிடைக்கும். சித்தர்களின் ஆசி கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் செய்யவேண்டியது தொடர்ச்சியான ஆன்மீக பயணம் மட்டுமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: