Followers

Tuesday, April 30, 2013

ஆன்மீக அனுபவங்கள் 87


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் ஆன்மீக தேடுதலோடு தான் நமது பதிவுக்கும் வருகிறார்கள் அவர்களுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டும் என்பதால் பல ஆன்மீக பதிவுகளை எழுதுகிறேன்.

நாம் ஆன்மீக தேடுதலோடு கோவில் சென்றால் மட்டும் நாம் ஆன்மீகவாழ்க்கை உயர்த்திக்கொள்ள முடியாது. நல்ல ஆன்மீகவாதிகளின் தொடர்பும் உங்களுக்கு வேண்டும் அப்பொழுது மட்டுமே ஆன்மீகவாழ்க்கை சாத்தியப்படும். நல்ல ஆத்மாவுடன் நாம் தொடர்பை வைத்துக்கொள்ளும்போது நமது ஆத்மாவும் சுத்தப்படும். நமது கர்மவினைகள் குறையும். கர்மவினைகள் குறைய குறைய ஆன்மீகவாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்க்கு செல்லாம்.

இன்றைய உலகத்திலும் பல புண்ணியஆத்மாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்வது கிடையாது. அவர்கள் சாதாரணமானவர்களா இருக்கிறார்கள். அவர்களை நாம் தான் தேடி கண்டுபிடிக்கவேண்டும்.

பல சிவனடியார்கள் பைத்தியம் போல் சுற்றிவார்கள். அவர்கள் யாரிடமும் பேசுவது கிடையாது. ஒரு சில நேரங்களில் பேசுவார்கள். அவர்கள் உங்களி்டம் பேசிவிட்டால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.  அதிர்ஷ்டசாலி என்றால் உடனே பணம் வரப்போகிறது என்று நினைக்க வேண்டாம். ஆத்மாவின் பலம் உள்ளவர் உங்களை ஆசிர்வதிப்பார். அவர்கள் ஆசி கிடைத்தாலே போதும்.

ஒரு நிகழ்வை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். நான் எனது குரு அறிமுகம் ஆவதற்க்கு முன்பு அடிக்கடி திருவண்ணாமலை செல்வது வழக்கம்.  கிரிவலம் செல்வது மட்டும் இல்லாமல் அடிக்கடி சாமி தரிசனம் செய்வதற்க்கு செல்வேன். திருவண்ணாமலை சாமி தரிசனம் முடித்துவிட்டு மேல்மலையனூர் சென்று அம்மனை பார்த்துவிட்டு சென்னை திரும்புவேன்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆன தேதியில் இருந்து முடிவதற்க்குள் நான் அண்ணாமலையாரை எப்படியும் தரிசனம் செய்துவிடுவது எனது வழக்கம். ஏன் என்றால் அக்னி உச்சத்தில் இருக்கும்போது அக்னி ஸ்தலமான அண்ணாமலையாரை வணங்குவது எனக்கு பிடித்தமான ஒன்று. அக்னி நட்சத்திரத்தில் வணங்கவேண்டும் என்பது நானாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு பழக்கம் வேறு புத்தகத்தில் இதனைப்பற்றி சொல்லவில்லை.

அக்னி நட்சத்திரத்தில் ஒரு நாள் அண்ணாமலையாரை வணங்கிவிட்டு வெளியில் வரும்பொழுது கோவிலுக்குள் குளம் இருக்கிறது அல்லவா. அந்த குளத்தின் நடுவில் ஒரு உருவம் எனது கண்களு்ககு நன்றாக தெரிகிறது. என்னுடன் எனது நண்பர் ஒருவர் வந்தார் அவனிடம் டேய் உனக்கு ஒரு உருவம் தெரிகிறாதா என்று கேட்டேன். அவன் எனக்கு தெரியவில்லை என்று சொல்லுகிறான். அந்த உருவம் உடனே மறைந்துவிட்டது. 

நானும் நம்ம கண்கள் தான் சரியில்லையோ என்று நினைத்துக்கொண்டு அதிலிருந்து நேராக ரமணர் வணங்கிய ஒரு பாதாளலிங்க கோவில் ஒன்று இருக்கிறது அல்லவா. அந்த கோவிலுக்குள் சென்று அவரை வணங்கிவிட்டு வெளியில் வரும்பொழுது நான் எனது நண்பனிடம் சொல்லுகிறேன் இந்த கோவிலுக்கு வந்தால் தான் எனக்கு ஏதாவது நடைபெறுகிறது என்று சொல்லுகிறேன். உடனே அந்த கோவிலில் பல்லி சத்தம் இடுகிறது. நான் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மேல்மலையனூர் சென்றுவிட்டு சென்னை வந்துவிட்டேன். 

சென்னையில் அன்று இரவு தூங்கும்பொழுது அண்ணாமலையார் கோவிலில் நடந்தது என் கண் முன்பே அந்த உருவம் வந்தது. அந்த உருவம் என் தலையில் கை வைத்தது. முதன் முதலில் அற்புதமான ஒரு புதிய உணர்வை அப்பொழுது தான் நான் பெற்றேன். அதன் பிறகு குரு அறிமுகம் எல்லாம் நடைபெற்றது.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நாம் கோவிலுக்கு சென்றாலும் சந்திக்கும் நபர்களும் நமக்கு பலவிதத்தில் ஆன்மீகவாழ்க்கைக்கு உதவுவார்கள். அவர்களை நீங்கள் பயன்படுத்தும்பொழுது உங்களின் ஆன்மீகவாழ்க்கைக்கு மிகப்பெரிய தொடக்கம் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: